மன்னாரில் இறுதி நிலை பராமரிப்பு செயற்பாடுகள் நிறுத்தத்தினால் நோயாளர்கள் அவதி !

மன்னாரில் இறுதி நிலை பராமரிப்பு செயற்பாடுகள் நிறுத்தத்தினால் நோயாளர்கள் அவதி !

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் மன்னார் மாவட்டத்தில் இறுதி நிலை நோயாளர்களின் சிகிச்சை நடவடிக்கைகள் கடந்த பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

புற்று நோயாளர்கள் , சிறுநீரக நோயாளர்கள் மற்றும் படுக்கை நோயாளிகள் போன்ற இறுதி நிலை நோயாளர்களாக இருப்பவர்களை மருத்துவமனைகளில் வைத்து பராமரிக்க முடியாதவர்களும் கிளினிக் போன்ற செயற்பாடுகளுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்ல வசதிகளற்ற வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பாமர மக்களே இந்த சேவையை பெற்றுவந்துள்ளனர்.

ஆனால், திடீரென இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதால் இறுதி நிலை நோயாளர்களும், நோயாளிகளின் குடும்பத்தினரும் மிகவும் சிரமப்படுவதுடன் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த இறுதி நிலை மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதால் விரும்பத்தகாத மரணமும் நிகழ்ந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இறுதி நிலை நோய் பராமரிப்பில் மன்னார் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்து மீண்டும் மன்னார் மாவட்டத்தில் இறுதி நிலை நோயாளர் பராமரிப்பினை செயற்படுத்த முன் வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான வைத்தியர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பொதுமக்கள் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

அத்துடன், விரைவாக மக்களுக்கான இறுதி பராமரிப்பு செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )