டிரம்ப் – பைடன் நாளை நேருக்கு நேர் விவாதம்

டிரம்ப் – பைடன் நாளை நேருக்கு நேர் விவாதம்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நாளை (26) நடைபெற உள்ளது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நாளை இரவு 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கின்றனர்.

அப்போது, தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்பார்கள். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளிப்பார்கள். குறிப்பாக, குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரேன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

டிரம்ப் – பைடன் இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக நேருக்கு நேர் விவாதம் செய்வது இது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன்பு, 2020 தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முன்னணி வேட்பாளர்கள், நாட்டிற்கான தங்களின் செயல்திட்டங்கள் பற்றிய தெளிவான பார்வையை வாக்காளர்களுக்கு வழங்க உள்ளதால், இந்த விவாதம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த விவாதத்தில் இரு வேட்பாளர்களும் அதிக உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உள்ளதாக விவாத நிகழ்ச்சியின் இயக்குனர் ஆரோன் கால் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்ததில் இருந்து விவாதம் செய்யவில்லை என்றும், தற்போதைய விவாதத்தில் அவர்களின் வழக்கமான விவாத பாணிகளுக்கு திரும்ப சிறிது நேரம் ஆகலாம் என்றும் கால் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )