பொசன் போயா தினம்

பொசன் போயா தினம்

இலங்கை வரலாற்றில் பொசன் போயா தினம் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இன்றைய நாளில்தான் பெளத்தம் இலங்கைக்கு முதன் முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கி.மு. 328 ஆவது ஆண்டில் ஒரு பொசன் போயா தினத்தன்று இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வர் மஹிந்த தேரர் இலங்கைக்கு வந்து மிஹிந்தலை மலை உச்சியில் இலங்கையில் அரசாட்சி புரிந்து வந்த தேவநம்பியதீசன் மன்னனை சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றது.

அசோகச் சக்கரவர்த்தி ஒருநாள் “பல உயிர்களை பலிகொண்டு போரில் அடைந்த வெற்றியினால் எதனை சாதிக்கப் போகிறேன்?” என்று நிலை தடுமாறி வேதனையில் மூழ்கியிருந்த போது, அவருக்கு போதிமரத்து மாதவன் புத்தபெருமானின் நற்போதனைகளின் உண்மைத் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

அன்று முதல் அசோகச் சக்கரவர்த்தி யுத்தம், போன்ற தீய எண்ணங்களை அடியோடு துறந்துவிட்டு, பெளத்த மதத்தை தழுவி பெளத்த மதத்தின் நற்போதனைகளை உலகெங்கும் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.

இந்த பெளத்த மதத்தை போதிக்கும் பணிக்கு தனது மகன் இளவரசர் மஹிந்தவையும், மகள் இளவரசி சங்கமித்தையையும் தேர்ந்தெடுத்தார். பின்னர் காவி உடையணிந்து பெளத்த மதத்தை உலகத்திற்கு பரப்பும் பணிக்காக துறவறம் பூண்ட அரஹட் மஹிந்த இலங்கைக்கு வந்து மன்னன் தேவநம்பிய தீசனை சந்திக்கச் சென்று பெளத்த மதத்தை அவரிடம் போதித்து, கருணாமூர்த்தி புத்த பெருமானின் போதனைக்கு அமைய கருணையுள்ளம் கொண்ட வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று போதனை செய்தார்.

இவர்களின் இந்த பெளத்த போதனையை கேட்டு மனம்மாறிய தேவநம்பியதீச மன்னன், மிருகங்களை வேட்டையாடுவதை அடியோடு கைவிட்டு பெளத்த தம்மத்தை தனது பல்லாயிரக்கணக்கான மக்கள் சகிதம் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வே இலங்கையில் பெளத்தம் தழைத்தோங்குவதற்கான ஆரம்பமாகும். அசோகச் சக்கரவர்த்தி இலங்கைக்கு போதனை செய்த பெளத்த மதம் சீனா, ஜப்பான், தூரகிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கும் பரவிய போதும், இலங்கையில்தான் பெளத்த மதம் வலுவாக நிலைகொண்டது. இதனையடுத்து இலங்கையை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் பெளத்த விகாரைகளையும், பெளத்த தூபிகளையும் நாடெங்கிலும் நிர்மாணித்தனர்.

மிஹிந்தலை மலையில் முதன்முதலில் தேவநம்பியதீச அரசனை சந்தித்த மஹிந்த தேரர், பெளத்த மதத்தின் தத்துவத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா என்பதற்கும் அவரின் அறிவின் தரத்தை அறிந்து கொள்வதற்கும் பல கேள்விகளை எழுப்பினார்.

“நாம் உண்மைத் தத்துவத்தை உலகத்திற்கு உபதேசித்த ஒரு பெரியாரின் நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கிறோம்” என்று கூறி பெளத்த மதத்தை போதித்த போது, அதனை தேவநம்பியதீச மன்னன் ஏற்றுக் கொண்டு அன்றிலிருந்து பெளத்த மதத்துக்கு அமைய தன்னுடைய மற்றும் நாட்டு மக்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தார்.

அந்தச் சம்பவத்தினால் பெளத்தத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் துறவறம் பூண்டு நாடெங்கிலும் பெளத்தத்தை பரப்பினர். இந்த நிகழ்வு இலங்கையில் கலாசார மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது.

இந்தச் சம்பவத்திற்கு சில காலத்திற்கு பின்னர் அசோகச் சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்தை தேரர் புத்த பெருமான் புனிதத்துவம் அடைந்த அரசமரத்தின் கிளையொன்றை கொண்டுவந்து அதனை அனுராதபுரத்தில் நாட்டினார். இந்தக் கிளை இன்று ஒரு பெரிய விருட்சமாக மாறி ஸ்ரீ மாபோதி என்ற பெளத்த புனிதத் தலங்களின் பிரதான நிலைக்கு வந்துள்ளது.

பெளத்த மதம் இலங்கைக்கு அறிமுகமாகிய பொசன் போயா தினம் புதியதோர் கலாசாரத்தையும் அமைதியான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )