“சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா ?” ரெலோ சவால்

“சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா ?” ரெலோ சவால்

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த சரியான கணக்குகளை வெளிக்கொண்டு வருவதற்காக சர்வதேச விசாரணைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தயாரா ? என ரெலோவின் பேச்சாளர் கு. சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், “காணாமல் ஆக்கபட்டோர் எத்தனை பேர் என்ற வாய்க் கணக்குகளை சொல்வதை விடுத்து சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமாகவே சரியான கணக்கினை அறிந்து கொள்ள முடியும். அப்பொழுது தான் யார் பொய் சொல்லுகிறார்கள் யார் உண்மை சொல்லுகிறார்கள் என்பது வெளிவரும். அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அதை விடுத்து காலத்துக்கு காலம் வெளிவிவகார அமைச்சர்களாக வருபவர்கள் தங்கள் மனக்கணக்குகளின் படி காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை கூறுவது அபத்தமாகும்.

சர்வதேச பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டு இருக்கலாம் என்று சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த உண்மையை கண்டறிவது அரசினுடைய கடமை. அதற்கான நியாயபூர்வமான விசாரணையை நடத்துவதும் அரசின் கடமை. உள்ளூர் விசாரணைகளின் மூலம் நீ பொய் சொல்லுகிறாய், நான் பொய் சொல்லுகிறேன் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதனால் தான் சர்வதேச விசாரணை கோரப்படுகிறது.

சர்வதேச விசாரணையின் மூலமே சரியான தரவுகளையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய ஏற்றுக்கொள்ள ப்படக்கூடிய எண்ணிக்கையும் அறிந்து கொள்ள முடியும்.

இதனால் தான் நாம் சர்வதேச விசாரணையை கோருவதோடு ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகரும் மனித உரிமை பேரவையும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினுடைய கருத்தும் சர்வதேச விசாரணையை கோருவதே சாலச் சிறந்தது என்று தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. அவர் கூறும் எண்ணிக்களை தமிழ் மக்களோ சர்வதேச பொறிமுறைகளோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

காலத்துக்கு காலம் வாய் கணக்குகளை வெளியிடுவதை விடுத்து இம்முறை ஐநா மனித உரிமைப் பேரவையில் எதிர்கொள்ள இருக்கும் பிரேரணைக்கு இணைய அனுசரணை வழங்கி சர்வதேச விசாரணை மூலமாக பொறுப்பு கூறல் நல்லிணக்கத்திற்கு அரசு தயாராக வேண்டுமே தவிர இந்த மாதிரியான கருத்துக்கள் எந்த முடிவுக்கும் இட்டுச் செல்லாது.

சரியான கணக்குகளை அறிந்து கொள்ள அமைச்சர் அலி சப்ரி அவர்கள் சர்வதேச விசாரணைக்கு தயாரா? என்பதற்கு அவர் பதில் கூற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )