தமிழகத்தில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்கு தடை !

தமிழகத்தில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகை நாய் இனங்களுக்கு தடை !

சென்னையில் ஐந்து வயது சிறுமியை ராட்வீலர்ஸ் வகையைச் சேர்ந்த நாய்கள் தாக்கியதை அடுத்து தமிழக அரசு 23 வகை நாய் இனங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக் உள்பட 23 வகை நாய் இனங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது.

கலப்பினங்கள் இறக்குமதி, இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்படுகிறது.

இந்த வகை நாய்களை வைத்திருப்போர் உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும்.
இல்லையென்றால் அவர்களுக்கு 1,000ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதனை முழுமையாக கடைபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

சென்னையில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும்.

இல்லையென்றால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1,500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்து இருந்தனர்.

நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு மூன்றே நாட்களில் 1,000 பேர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் வைத்தியர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது, கழுத்தில் சங்கிலியால் கட்டி அதனை உரிமையாளர் கையில் பிடித்திருக்க வேண்டும்.

வாய் மூடியிருக்கும் வகையில் ‘மசூல்’ என்று அழைக்கப்படும் கவசத்தையும் கண்டிப்பாக நாயின் முகத்தில் அணிவித்திருக்க வேண்டும்.

இதுபோன்ற பாதுகாப்பு விதிகளை மீறி நாய்களை யாராவது தெருக்களில் திரியவிட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக பொது மக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் 02 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )