
கேப்டனாக 100-வது வெற்றி
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய (20) ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 231 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதன்படி வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ரன்களை ரோகித் கடந்தார்.
அவர் இதுவரை 269 ஒருநாள் போட்டிகளில் 261 இன்னிங்சில் பேட்டிங் செய்து 32 சதம் உள்பட 11,029 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய உலக அரங்கில் 10-வது வீரர், இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி, சவுரவ் கங்குலி ஆகியோருக்கு அடுத்து 4-வது வீரர் ஆவார்.
அத்துடன் விராட் கோலிக்கு (222 இன்னிங்ஸ்) அடுத்து இந்த ஸ்கோரை அதிவேகமாக எட்டிப்பிடித்த வீரர் என்ற சாதனையாளர் பட்டியலிலும் இணைந்தார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் சேர்த்து கேப்டனாக ரோகித் சர்மா 100-வது வெற்றியை பெற்றார். முகமது அசாருதீன், டோனி, விராட் கோலிக்கு பிறகு மூன்று வடிவங்களிலும் கேப்டனாக 100 அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிகளைப் பெற்ற 4-வது இந்தியர் ரோகித்சர்மா ஆவார்.
அவர் தலைமையில் டெஸ்டில் 12 வெற்றியும், ஒருநாள் போட்டியில் 38 வெற்றியும், 20 ஓவர் போட்டியில் 50 வெற்றியும் கிடைத்துள்ளது.