
நாளை விசேட பாராளுமன்ற அமர்வு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான முடிவைச் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, நாளை (14) காலை 9.30க்கு பாராளுமன்றத்தின் விசேட கூட்டத்தைக் கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியின் தலைமையில் 10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி, பிரதமர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது.
அத்துடன், நாளை(14) இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சு சார் ஆலோசனைக் குழுவைக் கூட்டுவதற்கும் இங்குத் தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி பி.ப 2.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை நடத்துவதற்கும் இங்குத் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைப்பதாயின் அவற்றைப் பெப்ரவரி 17ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முன்னர் வழங்குவதற்கும் இங்கு இணங்கப்பட்டது.