
கொழும்பு துறைமுக புதைகுழியில் 16 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
கொழும்பு துறைமுகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் எனவும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.
இது வழக்கமான புதைகுழி அல்லவென்று தெரிவித்த அவர், உடல்கள் புதைக்கப்பட்ட விதத்திலிருந்து அவை கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது: இவை புதைக்கப்பட்ட காலப்பகுதியை விஞ்ஞான ஆய்வுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, இதுபற்றி அறிக்கைகள் வழங்கப்படும்.
இதுவரை 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அதிகமானவை அவயவங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. மூன்று பேரின் எலும்புக்கூடுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
சிறு குழந்தையின் கையில் செம்பு கலந்த ஏதோ ஒன்றால் கறை ஏற்பட்டிருப்பதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க மற்றும் துறைமுக காவல்துறையின் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ்.ஜயரத்ன ஆகியோர் இவற்றை அவதானித்துள்ளனர். கொழும்பு துறைமுக பகுதியில் உள்ள மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.