
கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் தீர்மானத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹக்கீம்
கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தால் முஸ்லிம் உள்ளிட்ட ஏனைய மதத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனால் அரசாங்கம் இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்வதற்கு அப்போது இருந்த அரசாங்கம் எந்தவித அறிவியல் பூர்ணமற்ற தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிராக பாரிய எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அரபுநாடுகளின் தூதுவர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு வெளிவிவகார அமைச்சு ஊடாக அப்போது இருந்த ஜனாதிபதியை கேட்டுக்கொண்டிருந்தனர். என்றாலும் அது செயற்படவில்லை.
அதேநேரம் இந்த விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான குற்றப்பத்திரத்திலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றின் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் மரணச்சடங்குகளை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தியுள்ள தடைகள் காரணமாக முஸ்லிம் மற்றும் ஏனைய மதத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அத்துடன் கொவிடில் மரணித்தவர்களை ஓட்டமாவடிக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமும் விஞ்ஞான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதல்ல. ஜெனீவா தீர்மானத்தின் மூலம் மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்வது, இதுதொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் முன்னாள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தை தற்போது சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளது. வைத்தியர் ஹசித்த பெரேரா கொவிட் தொற்று நிபுணர் குழுவில் இருந்தவர். அவருக்கு எதிராக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய அரசாங்கம் இந்த இரண்டு நபர்களுக்கும் எதிராக மனித உரிமையை மீறி செயற்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன்.
இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதுடன் சர்வதேச மட்டத்தில் கதைக்கப்பட்ட விடயமாகும். அதனாலே இதுதொடர்பில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறேன். இந்த விடயத்தில் முஸ்லிம் மக்கள் மாத்திரம் அல்ல. கத்தோலிக்க மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கொவிட்டில் மரணித்தவர்களின் சடலங்களை மாலை தீவுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் தற்போதும் பதவிகளை வகித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருன விஜேசேகர பதிலளிக்கையில், ரவூப் ஹக்கீம் தெரிவித்த விடயங்களை தெளிவாக உள்வாங்கிக்கொண்டேன். இந்த விடயம் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உங்களுக்கு தெளிவான பதில் ஒன்றை வழங்குகிறேன். அதற்காக சில தினங்களை வழங்குங்கள் என்றார்.